search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துறவரம் பட்டதாரி பெண்கள்"

    ஜெயின் மதத்தில் துறவரம் மேற்கொள்ளும் 2 பட்டதாரி பெண்கள் ‘சாரட்’ வண்டியில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். விழாவில் மாவட்ட கலெக்டர் கந்தசாமி, நீதிபதி மகிழேந்தி கலந்துகொண்டனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை சாயர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர்கள் டி.கவுதம்குமார், டி.அரவிந்த்குமார். இருவரும் சகோதரர்கள் ஆவர். ஜெயின் மதத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் திருவண்ணாமலையில் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். கவுதம்குமாருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். 2-வது மகள் பிரக்‌ஷா (வயது 26). அரவிந்த்குமாருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். 2-வது மகள் சுவேதா (26). இதில் பிரக்‌ஷாவும், சுவேதாவும் ஜெயின் மதத்தில் துறவு வாழ்க்கையை மேற்கொள்ள உள்ளனர்.



    இவர்கள் இருவரும் பள்ளி மற்றும் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். பிரக்‌ஷா எம்.பி.ஏ.வும், சுவேதா சி.ஏ.வும் படித்துள்ளனர். துறவரம் செல்ல வேண்டும் என்றால் அதற்காக எம்.ஏ. ஜெயினாலஜி படிக்க வேண்டும். இவர்கள் இருவரும் ராஜஸ்தானில் உள்ள மத கல்லூரியில் சேர்ந்து எம்.ஏ. ஜெயினாலஜி படித்து உள்ளனர்.

    துறவரம் மேற்கொள்ள உள்ள இந்த 2 பட்டதாரி இளம்பெண்களையும் வழியனுப்பும் விழா நேற்று திருவண்ணாமலை மீனாட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முன்னதாக திருவண்ணாமலை சன்னதி தெருவில் உள்ள சாயர் பங்களாவில் இருந்து திருமண மண்டபத்திற்கு மேள, தாளங்களுடன் ஊர்வலமாக வந்தனர். ஊர்வலத்தின் முன்பாக அலங்கரிக்கப்பட்ட யானை, குதிரையும் அழைத்து வரப்பட்டது.

    இதில் ஜெயின் மதத்தினர், அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், அரிமா சங்கம், ரோட்டரி சங்கம், ப்யுரேக் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் என பலர் கலந்துகொண்டனர். மேலும் துறவு வாழ்க்கை மேற்கொள்ள உள்ள பிரக்‌ஷாவும், சுவேதாவும் ‘சாரட்’ வண்டியில் அழைத்து வரப்பட்டனர். இந்த விழாவில் கவுதம்குமார், அரவிந்த்குமார் குடும்பத்தினர் மற்றும் பலர் கலந்துகொண்டு அனைவரையும் வரவேற்றனர்.

    விழாவில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, மாவட்ட நீதிபதி மகிழேந்தி, உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதாப், ஐ.ஏ.எஸ். அதிகாரி வள்ளலார், வனரோஜா எம்.பி., தி.மு.க. எம்.எல்.ஏ. கு.பிச்சாண்டி, அ.தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் பெருமாள் நகர் கே.ராஜன், முன்னாள் நகரமன்ற தலைவர்கள் பவுன்குமார், ஸ்ரீதரன், அருணை கல்வி குழும இயக்குனர் டாக்டர் கம்பன், முன்னாள் எம்.பி. வேணுகோபால், தொழில் அதிபர் ஜமாலுதீன்பாய் உள்பட பலர் கலந்துகொண்டு துறவரம் மேற்கொள்ள உள்ள 2 பெண்களையும் வாழ்த்தினர். மேலும் நிகழ்ச்சியில் பிரம்மகுமாரிகள், கன்னியாஸ்திரிகள் உள்பட அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

    திருவண்ணாமலையில் முதன் முறையாக ஜெயின் மதத்தில் துறவரம் மேற்கொள்வது இவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையடுத்து வருகிற 11-ந் தேதி சென்னை மாதவரத்தில் இவர்களின் குரு ஆச்சார்யா ஸ்ரீமகாஸ்ரமன் ஆசியோடு ஆன்மிக வாழ்க்கையில் பயணம் செல்ல உள்ளனர். இதற்காக அன்று சென்னையில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஜெயின் மதத்தை சேர்ந்தவர்கள் கலந்துகொள்கின்றனர்.
    ×